About Me

இணைய செய்தியாளர், இப்போது ஏஐ விமர்சகர் !

வலைப்பதிவுக்காக வைத்துக்கொண்ட சைபர்சிம்மன் எனும் பெயரே எனது டிஜிட்டல் அடையாளமாக மாறியிருக்கும் நிலையில், என்னை ’இணைய செய்தியாளர்’ என்று அறிமுகம் செய்து கொள்வதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

சுயேட்சை பத்திரிகையாளர், வலைப்பதிவாளர், நூலாசிரியர், டிஜிட்டல் இதழியல் கவுரவ விரிவுரையாளர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வதே வழக்கமாக இருந்தாலும், இணைய செய்தியாளர் என்பது இந்த இணைய செய்தி கையேட்டை முன்வைத்து யோசிக்கும் போது சிறந்த சுய அறிமுகமாக அமைகிறது.

குறிப்பிட்ட எந்த துறை சார்ந்து ஒரு செய்தியாளர் இயங்குகிறாரோ, அந்த துறையில் ஆழமாக கவனம் செலுத்தும் செய்தியாளராக அவர் கருதப்படுகிறது. என் இதழியல் பயணத்தில் ’இணையம்’ எனக்கான பேட்டையாக அமைகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இணையம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இடைவெளியில்லாமல் எழுதி வருகிறேன்.

யாஹூ காலம்

1990 களின் துவக்கத்தில் இதழியல் துறையில் நுழைந்தாலும், 1990 களின் இறுதியிலேயே எனக்கு இணையம் அறிமுகமானது. யாஹு வாயிலாகவே எனக்கு இணையம் அறிமுகமானது. பல ஆண்டுகளுக்கு யாவுவே இணையத்திற்கான நுழைவுவாயிலாக இருந்தது. யாஹுவே பல ஆண்டுகள் விரும்பி பயன்படுத்திய தேடியந்திரம்.

அதைவிட முக்கியமாக, இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள யாஹு செய்தி தளமே சிறந்ததாக விளங்கியது. யாஹுவில் இருந்தே மற்ற பயனுள்ள தளங்களை கண்டறிந்தேன்.

யாஹுவை இங்கு குறிப்பிட காரணம், இணையம் தொடர்பான எனது புரிதலில் யாஹு முக்கிய பங்கு வகிப்பது மட்டும் அல்ல, இந்த செய்தி கையேட்டிற்கான உந்துசக்தியாக விளங்கும் பல அம்சங்களில் ஒன்றாகவும் அமைகிறது.

வலை எழுத்து

இதனிடையே நான் பணியாற்றிய மாலைச்சுடர் நாளிதழில், இணையம் தொடர்பாக தினசரி பத்தி எழுவதற்காக கிடைத்த வாய்ப்பு, இணையம் சார்ந்த நிகழ்வுகளியும், போக்குகளையும் பின் தொடர்ந்து பதிவு செய்ய வைத்தது. இணைய வசதி என்பது மிக அரிதாக இருந்த அந்த காலகட்டத்தில், இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதோடு, இணையம் பற்றி தினசரி எழுதும் வாய்ப்பும் என்னை வளர்த்தெடுத்தது. இதுவே என்னை இணைய செய்தியாளராகாக்கியது.

இன்று இணைய வல்லுனர் என மற்றவர்கள் அடையாளம் காட்டவும் வழிவகுத்திருக்கிறது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக நாளிதழ் பதிப்பில் இணையம் சார்ந்த விஷயங்களை எழுதி வந்த நிலையில், 2008 ல் சைபர்சிம்மன் எனும் பெயரில் வலைப்பதிவு செய்யத்துவங்கினேன். நாளிதழ் பத்தியின் நீட்சியாக அமைந்த இந்த வலைப்பதிவு பின்னர் தனக்கான தனி வடிவம் கொண்டது.

’சைபர்சிம்மன்’, இணைய எழுத்தாளர் எனும் அடையாளத்தையும் பெற்றுத்தந்தது. இப்போது ஏஐ எழுத்தாளர், விமர்சகர் என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

டிஜிட்டல் பாதை

வணிகம், திரைப்படம், இலக்கியம், அரசியல், வேளாண்மை என பல துறைகள் சார்ந்து இதழியல் பணி அமைந்திருந்தாலும், பணி சார்ந்து பல தனிக்கட்டுரைகள் எழுதியிருந்தாலும், இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து எழுதுவதில் தனி கவனம் செலுத்த துவங்கினேன். இதன் பயனாக, விகடன்.காம், தமிழ் கம்ப்யூட்டர், வணிகமணி உள்ளிட்ட இதழ்களிலும் இணையம் சார்ந்த கட்டுரைகளை எழுதத்துவங்கினேன்.

இணையம் சார்ந்த எனது முதல் தொடர் சுட்டி விகடனில் வெளியானது. சமூக ஊடக உலகின் மிகப்பெரிய பங்களிப்பு என கருதப்படும், அரபு வசத்தம் புரட்சி தொடர்பாக விகடன்.காமில் கட்டுரை எழுதினேன்.

டிஜிட்டல் விரிவுரையாளர்

இதனிடையே இந்தியா டுடே தமிழ் பதிப்பில் பணிக்கு மாறி ஒன்றரை ஆண்டு அனுபவத்திற்கு பின், சுயேட்சை பத்திரிகையாளராக மாறினேன். வலைப்பதிவுக்காக எழுதி வந்ததோடு, தமிழ் கம்ப்யூட்டர், புதிய தலைமுறை கல்வி, 4தமிழ்மீடியா, புதிய தலைமுறை.காம், தினமணி.காம், தமிழ் யுவர்ஸ்டோரி, தினமலர் பட்டம் உள்ளிட்ட ஊடகங்களில் தொடர்களாகவும், தனிக்கட்டுரைகளாகவும் எழுதி வந்திருக்கிறேன். தமிழ் இந்து நாளிதழ் இணைப்பு பக்கத்திலும், டிஜிட்டல் பதிப்பிலும் பத்தி கட்டுரைகளையும், தொடர் கட்டுரைகளையும் எழுதி வருகிறேன். தமிழ் இந்து காமதேனு டிஜிட்டல் பதிப்பிலும், தினமலர் பட்டம் இதழிலும் ஏஐ தொடர்பான தொடர்களை எழுதியதும் முக்கியமாக அமைகிறது.

இதனிடையே, லயோலா கல்லூரியின் கவுசல் கேந்திரா துறையில் டிஜிட்டல் இதழியல் விரிவுரையாளராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இணைய பரிட்சயம், டிஜிட்டல் இதழியல் வகுப்பெடுக்க உதவியது என்றால், டிஜிட்டல் இதழியல் வகுப்பிற்காக வாசித்த விஷயங்கள் இணைய அனுபவத்தையும், எழுத்தையும் மேலும் செழுமையாக்கியது.

இதழியல்+ விரிவுரையாளர் அனுபவத்தால் ஏற்கனவேமொபைல் ஜர்னலிம்” புத்தகம் எழுதிய நிலையில், இப்போது இந்த இணைய செய்தி கையேடு உருவாகியிருக்கிறது. டிஜிட்டல் இதழியல் முதலாண்டு வகுப்பில் முதுகலை மாணவர்களுக்கு பரிந்துரைத்த 25 தளங்களின் நீட்சியாக இந்த கையேடு அமைகிறது. மேலும், இளம் இதழாளராக எனக்கு கிடைத்த செய்தி வாசிப்பு அனுபவமும் இதற்கான அடிப்படை.

எல்லாவற்றுக்கும் மேல், இணையத்தால் இணைவோம், முதல் புத்தகத்திற்கு பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களை தொகுத்தளிக்கும் கையேட்டிற்கு திரும்பியிருக்கிறேன்.

இந்த கையேடு செய்தி ஆர்வம் கொண்ட எவருக்கும் ஈர்ப்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். கூகுளாண்டவர் மட்டுமே போதும் என நினைத்திருந்த நிலை மாறி, சாட்ஜிபிடியிடம் எல்லா பதில்களும் இருப்பதாக பலரும் கருதும் சூழலில், கைகளால் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களின் பரிந்துரையாக இது அமைகிறது.